
நார்வே நாட்டில் தீவிரவாத தாக்குதல் நடத்தி 77 பேரை கொன்றவர், தனக்கு விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நார்வே நாட்டின் ஆஸ்லோவில் கடந்த ஆண்டு ஜூலை 22ம் தேதி காரில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்தது. இரண்டு மணி நேரம் கழித்து உடோயா தீவில், நார்வே தொழிலாளர் கட்சியின் இளைஞர் அணியினர் முகாம் மீது சரமாரி துப்பாக்கிச் சூடும் நடந்தது.
அடுத்தடுத்து நடந்த தீவிரவாத தாக்குதலில் 77 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக 32 வயதுடைய ஆண்டர்ஸ் பெஹ்ரிங் பிரீவிக் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக ஆண்டர்ஸை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஸ்லோ மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
அப்போது, நோர்வேயில் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் குடியேறி வருகின்றனர். அத்துடன் ஐரோப்பாவின் ஆதிக்கத்தால் நார்வே கலாசார சீரழிவை சந்தித்து வருகிறது.
அதனால் தேச துரோகிகள் மீது நானே நடவடிக்கை எடுத்தேன். இதில் எந்த கிரிமினல் குற்றமும் செய்யவில்லை. என்னை விடுதலை செய்ய வேண்டும். இந்த தாக்குதலுக்காக எனக்கு ராணுவ விருது வழங்கி கவுரவிக்க வேண்டும். என்றார்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஆண்டர்ஸை ஏப்ரல் 16ம் தேதி காவலில் வைக்கும்படி நீதிபதி வென்சி ஜெல்ஸ்டன் உத்தரவிட்டார். அன்று முதல் விசாரணை தொடங்க உள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 21 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும். மனநிலை சரியில்லாதவர் என்பது நிரூபணமானால் மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.


No comments:
Post a Comment