இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக போலிப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் சிலரின் நடவடிக்கைகள் கண்டிக்கப்பட வேண்டியவை என பிரதமர் டி.எம். யெயரட்ன தெரிவித்துள்ளார்.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் அளவிற்கு எந்தவொரு அரசாங்கமும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படவில்லை எனவும் 30 ஆண்டுகளாக மக்களின் வாழும் உரிமை பறிக்கப்பட்டிருந்தது அந்த மாபெரும் பிரச்சினைக்கு இந்த அரசாங்கமே முற்றுப் புள்ளி வைத்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எந்த இடத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என்ற அச்சத்திலேயே மக்கள் வாழ்ந்து வந்ததாகவும் கொடூரமான பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக யெனாதிபதி தலைமையிலான படையினர் மனிதாபிமான மீட்புப் பணிகளை மேற்கொண்டனர் என தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் நகைப்புக்குரியது. படையினர் எல்லா நேரங்களிலும் ஒழுக்கத்துடன் செயற்பட்டனர் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேற்குலக நாடுகள் சிறிய நாடுகளின் மக்களது மனித உரிமைகளை மீறும் வகையில் செயற்படுகின்றன.
பலம்பொருந்திய நாடுகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டால் தவறில்லை, சிறிய நாடுகளின் தலைவர்கள் மேற்கொண்டால் அதுவே தவறு என்ற நிலை உருவாகியுள்ளது.
உலக நாடுகளின் இந்த இரட்டை நிலைப்பாட்டுக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதமர் யெயரட்ன தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment