தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பின் (டெசோ) அடுத்த மாநாட்டை ஆர்ஜென்ரீனாவில் நடத்துவது தொடர்பில் கலைஞர் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளூரப் பரிசீலித்து வருகின்றது.தமிழகத்தில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் இவ்வாறான மாநாடுகளை நடத்தினால் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கலாம் என்ற கருத்து ஆய்வரங்கில் முன்வைக்கப்பட்டது.
தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பின் மாநாட்டை சர்வதேசமயப்படுத்துவதன் ஓர் அங்கமாகத்தான் அதனை வெளிநாடுகளிலும் நடத்துவது குறித்து ஆராயப்பட்டு வருகின்றது என்றும், "டெசோ' ஏற்பாட்டுக் குழு இதற்கான பூர்வாங்கப் பணிகளை முன்னெடுக்கும் என்றும் அறிய முடிகின்றது.
கடந்த 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை தமிழகத்தில் சென்னையில் தி.மு.கவின் தலைமை யில் "டெசோ' அமைப்பின் மாநாடு நடைபெற்றது. "டெசோ' மாநாடு ஆரம் பிப்பதற்கு முன்னர் அன்று காலை ஆய்வரங்கமொன்று நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வரங்கில் ஈழத் தமிழர்களின் பிரச்சினை குறித்து பன்னாட்டுப் பிரதிநிதிகளின் கருத்துகள் கேட்டறியப்பட்டுள்ளன. அத்துடன், "டெசோ' அமைப்பின் செயற்பாடுகளை விஸ்தரிப்பது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
இதன்போது "டெசோ' மாநாட்டை ஆர்ஜன்டீனாவிலும் நடத்துமாறு அதில் கலந்துகொண்ட ஆர்ஜன்டீன பிரதிநிதியொருவர் தி.மு.கவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் இவ்வாறான மாநாடுகள் நடத்தினால் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கலாம் என்ற கருத்தும் ஆய்வரங்கில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, "டெசோ' மாநாட்டை சர்வதேசமயப்படுத்துவது குறித்தும், அடுத்த மாநாட்டை ஆர்ஜன்டீனாவில் நடத்துவது குறித்தும் தி.மு.கவின் "டெசோ' ஏற்பாட்டுக் குழு உள்ளூரப் பரிசீலித்து வருகின்றது என அறியமுடிகின்றது.
சில காரணிகளைக் கருத்திற்கொண்டு அடுத்த மாநாட்டை வெளிநாடொன்றில் நடத்தும் நிலைப்பாட்டில் தி.மு.க. உறுதியாக உள்ளது என மேலும் அறியமுடிகின்றது.
அதேவேளை, டெசோ' அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து சென்றுவிட்டு நேற்று நாடு திரும்பிய நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன , ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை சர்வதேசத்திற்குக் கொண்டுசெல்லும் நோக்கில் "டெசோ' மாநாடு வெளிநாடுகளிலும நடத்தப்படவேண்டும் என்ற கருத்தை ஆய்வரங்கின்போது முன்வைத்துள்ளார்.


No comments:
Post a Comment