'இளைய தளபதி' விஜயை வைத்து இயக்குனர் ஏ.எல். விஜய் எடுக்கும் படத்தில் பாடகர் யேசுதாஸின் மகனும், பாடகருமான விஜய் யேசுதாஸ் வில்லனாக நடிக்கிறார் என இன்று யாரோ கொளுத்திப் போட, என்னப்பா இது கண்டபடி செய்தி வருகிறதே என அதிர்ந்து நிற்கிறார் இயக்குநர் விஜய்!
இயக்குனர் ஏ.எல்.விஜய் தனது தாண்டவம் படத்திற்கு அடுத்து நடிகர் விஜய்யை இயக்கப் போகிறார். இந்த ஒரு செய்திதான் இப்போதைக்கு உண்மை.
ஆனால் இதைவைத்து ஓராயிரம் செய்திகள் வந்துவிட்டன. அதில் ஒன்றுதான் விஜய் யேசுதாஸ் வில்லன் என்ற சமாச்சாரமும்.
இதுகுறித்து இயக்குநர் விஜய்யிடமே நாம் கேட்டோம்.
விஷயத்தைக் கேட்டவர், காட்டிய ரியாக்ஷனைத்தான் தலைப்பாகத் தந்திருக்கிறோம்.
அவர் கூறுகையில், "நான் இன்னும் தாண்டவத்தையே தாண்டவில்லை. இந்தப் படம் முடிந்ததும் அடுத்த படம் பண்ணப் போகிறேன் என்பது மட்டும்தான் உண்மை. அதுபற்றி வேறு எதையும் நான் யோசிக்கக் கூட இல்லை. தாண்டவம், ஆடியோ ரிலீஸ், பட வெளியீடு என எக்கச்சக்க வேலை மூச்சு முட்டுது.
விஜய் யேசுதாஸ் நல்ல பாடகர். பாட்டுப் பாடற அவரை ஏங்க நான் வில்லனாக்கப் போறேன்.. எதுவா இருந்தாலும் ஒரு வாட்டி எங்கிட்ட கேட்டுக்கங்க," என்றார்.
No comments:
Post a Comment