சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியாக விஜய் டிவியில் நம்மில் ஒருவன் என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள். இதில் முகமுடி படத்தின் இயக்குநர் மிஷ்கின், ஜீவா, நரேன் ஆகியோர் பங்கேற்று ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். சூப்பர் ஹீரோவாக மாறுவது சாதாரண விசயமில்லை. முகமூடி படத்தில் ஜீவாவின் உடைகள், மேக் அப் அதை உணர்த்தியது.
சினிமாவிற்காக நடிப்பது என்பது வேறு, அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவது வேறு. சில கதாநாயகர்கள் தான் கதாபாத்திரத்திற்காக தங்களை வருத்திக்கொள்வார்கள். கமல், விக்ரமிற்கு அடுத்தபடியாக இன்றைய இளம் தலைமுறை நாயகர்களில் அஜீத், ஷ்யாம், ஜீவா, ஜெயம்ரவி, ஆர்யா போன்ற கதாநாயகர்கள் தங்களின் கதாபாத்திரத்திற்காக பெருமளவில் தங்களை வருத்திக்கொண்டு நடிக்கின்றனர்.
விஜய் டிவியின் சுதந்திர தின நிகழ்ச்சியில் முகமூடி படத்தின் அனுபவங்களை சூப்பர் ஹீரோ ஜீவா, சூப்பர் வில்லன் நரேன், படத்தின் இயக்குநர் மிஷ்கின் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
குங்பு பழகும் சாதாரண மனிதன் எப்படி சூப்பர் ஹீரோவாக உருவாகிறான் என்பதுதான் முகமூடி படத்தின் கதை. தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோவாக நடித்துள்ள ஜீவா முகமூடி படத்திற்காக பல சிரமங்களை அனுபவித்ததாக மிஷ்கின் தெரிவித்தார்.இதற்காக ஜீவா அணிந்த உடைகளையும், அவர் போட்டுக்கொண்ட மேக் அப் போன்றவைகளை ஒளிபரப்பினார்கள். மிஷ்கின் சொன்னதை விட சிரமமாகவே இருந்தது.
கதையை கேட்காமலேயே முகமூடி படத்தில் வில்லனாக நடிக்க ஒத்துக்கொண்டதாக டிராகன் ரோலில் நடித்த நரேன் தெரிவித்தார்.
ஜீவாவின் அமைதி குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளினி பாவனா, கேள்வி எழுப்பினார். சூப்பர் மேன் உடைகளை போட்டுக்கொண்டு பேசக்கூட முடியாமல் தவித்ததாக ஜீவா வருத்தப்பட்டு தெரிவித்தார். அந்த படத்தின் தாக்கம் இன்னும் தொடர்வதாகவும், நகைச்சுவையோடு பேசும் தன்னை சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் இந்த அளவிற்கு மாற்றிவிட்டதாகவும் கூறினார் ஜீவா.
இது குழந்தைகளுக்கான நகைச்சுவை கலந்த திரைப்படம் என்று மூவருமே கூறினர். நிகழ்ச்சிக்குப் பின்னர் சூப்பர் ஹீரோ திரைப்படம் முகமூடி மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
நிகழ்ச்சியின் இடையே சிறுவர்களின் கராத்தே நிகழ்ச்சி இடம்பெற்றது. சிறுவர்களின் சாகசங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது. இதற்காக விஜய் டிவிக்கு ஸ்பெசல் பாரட்டுக்களை தெரிவிக்கலாம்.
No comments:
Post a Comment