'உலகத்துல எத்தனையோ விளையாட்டு இருக்கு. அது எதுக்குமே இல்லாத பெருமை கபடிக்கு மட்டும்தான். அது என்ன தெரியுமா? உடம்பு முழுக்க மண்ணுல படுற விளையாட்டு இது ஒண்ணுதான்'!
காமெடி சந்தானத்தின் கலக்கல் பஞ்ச் இது. இவர் மட்டுமல்ல, முன்னணி நடிகர்கள் பலரையும் பேச வைத்திருக்கும் ஒரு நிகழ்ச்சி கலக்கல் கபடி கே.பி.எல். ஜெயா தொலைக்காட்சியில் வரும் 25 ந் தேதி முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகவிருக்கிறது இந்த நிகழ்ச்சி.
'ஏழுபேரு ஆட்டம்... திரண்டு நிக்குது கூட்டம்' என்று இந்த நிகழ்ச்சியின் பிரமாண்டத்தை ஒரு வரியில் விவரித்து விடலாம். முதல் கட்ட படப்பிடிப்பு நடந்த இடமான ஈரோட்டில் அப்படி திரண்டு நின்றது கூட்டம். ரசிகர்களின் உற்சாகமான விசிலுக்கு ஈடு கொடுக்கும்படி ஆடியது திடகாத்திரமான ஆண்கள் அல்ல.... தில்லான பெண்கள்!
பள்ளி கல்லூரிகளில் பயின்று வரும் இந்த பெண் பிள்ளைகள் 32 மாவட்டங்களின் சார்பாக 32 அணியாக திரண்டு போட்டியிட்டிருக்கிறார்கள். யாருக்கு வெற்றி என்பதை அறிய ரசிக மகாஜனங்கள் துடியாக துடிக்கப் போகிறார்கள். ஏனென்றால் களத்தில் நிலவிய சூடு அப்படி...
இந்த நிகழ்ச்சியின் சுமார் ஒரு மணி நேர சிறப்பு நிகழ்ச்சியை நாளைய சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றாக ஒளிபரப்பவிருக்கிறது ஜெயா டி.வி. ஆகஸ்ட் 15 ந் தேதி மாலை 5 மணிக்கு ஏக தடபுடலாக ஒளிபரப்பாகவிருக்கிறது கலக்கல் கபடி கே.பி.எல்.
No comments:
Post a Comment