உலகெங்கும் கோடிக்கணக்கான உள்ளங்களில் கொலுவீற்றிருக்கும் இசைஞானி இளையராஜாவின் ரசிகர்கள் சென்னையில் ஆகஸ்ட் 19ம் தேதி கூடவுள்ளனர். இது இளையராஜாவின் யாஹூ குரூப் உறுப்பினர்களின் 25வது கூட்டமாகும். இதற்கான ஏற்பாடுகளை, குரூப்பை உருவாக்கி நிர்வகித்து வரும் டாக்டர் ஜே. விஜய் வெங்கட்ராமனும் அவரது சகாக்களும் சிறப்பாக செய்து வருகின்றனர்.
சினிமாவில் ஹீரோக்களுக்குத்தான் ரசிகர்கள் எக்கச்சக்கமாக இருப்பார்கள். ஆனால் அதற்கு நிகராக, ஏன் அதை விட ஒரு படி மேலான, உயர்வான, நிறைவான, அழகான ரசிகர்களைக் கொண்ட ஒரே இசையமைப்பாளர் ராஜா மட்டுமே. உண்மையில் இவர் இசையமைத்த பெரும்பாலான படங்களில் இவர்தான் ஹீரோவாக திகழ்ந்திருப்பார். கேட்டவுடன் சிலிர்க்க வைக்கும் இசையைக் கொடுக்கும் ஒரு சில இசை ஹீரோக்களில் ராஜாவுக்கு முதலிடம் உண்டு.
கடந்த தலைமுறையினரை மட்டுமல்லாமல் இப்போதைய தலைமுறையினரையும் கூட வியக்க வைத்த, லயிக்க வைத்த பெருமைக்குரியவர் இளையராஜா. அவரது தென்றல் இசைக்கு அடிமையானவர்கள் ஒன்று கூடி உருவாக்கியதுதான் இந்த யாஹூ ராஜா குரூப
இளையராஜாவின் ரசிகர்களுக்கான இணையதள ரசிக மேடை இது. இதை கோவையைச் சேர்ந்த பிரபல டாக்டரும், ராஜாவின் முன்னணி ரசிகர்களில் ஒருவருமான டாக்டர் ஜே. விஜய் வெங்கட்ராமன் 1999ம் ஆண்டு மே 17ம் தேதி உருவாக்கினார். வெறுமனே ராஜாவின் இசையை மட்டும் பேசிக் கொண்டிருக்காமல், ராஜாவின் இசை குறித்து கிட்டத்தட்ட ஒரு ஆய்வையே இந்த குரூப் மேற்கொண்டிருக்கிறது என்பது ஆச்சரியமானது. தமிழ் இசையமைப்பாளர் ஒருவருக்கு இந்த அளவுக்கு உயர்ந்த தரத்திலான ஒரு ரசிகர் குழாம் இருக்கிறதா என்பது சந்தேகம்தான்.
எந்தவித சர்ச்சையும் இல்லாமல் முழுக்க முழுக்க ராஜா மற்றும் அவரது இசையை மட்டுமே அலசும் அருமையான குரூப்பாக இந்த யாஹூ இளையராஜா ரசிகர் குழு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் இந்தக் குழு படிப்படியாக விரிவடைந்து இன்று உலகம் முழுவதும் 4400 உறுப்பினர்களுடன் அட்டகாசமாக நடை போட்டுக் கொண்டிருக்கிறது - ராஜாவின் இசையைப் போல கம்பீரமாக.
இந்த குழுவினர் சுய கட்டுப்பாட்டைக் காப்பதில் மிக நேர்த்தியாக செயல்படுகிறார்கள். இந்த குழுவின் விவாதங்களில் ராஜா மற்றும் அவரது இசையை மட்டுமே விவாதிக்கிறார்கள். ராஜாவைத் தாண்டி யாரைப் பற்றியும் இவர்கள் விமர்சிப்பதில்லை, ஒப்பிடுவதில்லை, பேசுவதில்லை.
டாக்டர் விஜய் வெங்கட்ராமனுடன் இணைந்து முப்பெரும் தூண்கள் போல பி.எஸ்.ராம்ஜி, வி.ஸ்ரீதர், எம்.ஸ்ரீவித்யா ஆகியோரும் இந்த குழுவை வழிநடத்திச் செல்கிறார்கள். இவர்கள் தவிர மேலும் பலரும் இந்தக் குழுவை சிறப்பாக கொண்டு செல்ல உதவி வருகிறார்கள்.
இளையராஜாவின் இசை சாதனைகளில் ஒன்றாக கருதப்படும் 'திருவாசகம் பை இளையராஜா', 'தி மியூசிக் மெஸையா' ஆகிய படைப்புகளில் இந்த ரசிகர் குழுவுக்கும் ஒரு முக்கியப் பங்கு உண்டு.
ராஜாவின் யாஹூ குரூப்பை யாஹூ இந்தியா நிறுவனம் முறையாக அங்கீகரித்துள்ளது இந்த குரூப்புக்குப் பெருமை சேர்ப்பதாகும். மேலும் 2008ம் ஆண்டு ஜூன் 7ம் தேதி மும்பையில் நடந்த 3வது யாஹூ குரூப் மாடரேட்டர்கள் சங்கத்தின் மாநாட்டுக்கும் இளையராஜா யாஹூ குரூப் அழைக்கப்பட்டிருந்தது. குரூப் சார்பில் உறுப்பனர் வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டார்.
இந்த குரூப்பைச் சேர்ந்தவர்கள் ஆண்டில் சில நாட்கள் ஒன்றாக சந்தித்து ஆரோக்கியமான விவாதங்களை எடுத்து வைக்கிறார்கள். 2002ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. 2005 முதல் 2010 வரை சென்னையில் உள்ள மாபோய் அகாடமியில் தொடர்ந்து இவர்களின் கூட்டங்கள் நடந்து வந்தன.
இளையராஜாவின் இசைப் படைப்புகள் குறித்து விவாதங்கள் இந்த கூட்டத்தில் இடம் பெறுகின்றன. பல்வேறு தலைப்புகளில் உறுப்பினர்கள் பேசுகிறார்கள். இளையராஜாவின் இசையில் பொதிந்து கிடக்கும் பல்வேறு சிறப்பம்சங்களையும் விவாதிக்கிறார்கள். அத்தோடு நில்லாமல் ஆர்கெஸ்டிரா மூலம் இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்களையும் ஒலிக்கச் செய்து இசை விருந்தும் படைக்கிறார்கள். உறுப்பினர்கள் பலரும் உற்சாகமாக இதில் பங்கெடுத்து பாடுகிறார்கள்.
வெறுமனே கூடி விவாதித்துக் கலையாமல் ஆய்வுத் தாள்களையும் சமர்ப்பிப்பது இந்த குரூப்பின் முக்கிய அம்சமாகும்.
கடந்த 2009ம் ஆண்டு மே 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் கோவையில் ராஜா குரூப்பின் 10வது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் தற்போது சென்னையில் ஆகஸ்ட் 19ம் தேதி இக்குழுவின் 25வது கூட்டம் நடைபெறவுள்ளது.
காலை 9.30 மணிக்குத் தொடங்கும் கூட்டம் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும்.
கூட்டம் நடைபெறும் முகவரி
கிளினிமைன்ட்ஸ்
எண் 9, தாமோதரன் தெரு, கெல்லிஸ், கீழ்ப்பாக்கம்
சென்னை -10
மேல் விவரங்களுக்கு 9600055773 என்ற அலைபேசியில் தொடர்பு கொண்டு அறியலாம்.
No comments:
Post a Comment