
சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்களுக்குச் சாட்சியாக இருந்தவரும், சிரியாவில் செய்தி சேகரிப்பின் போது அரசபடைகளால் படுகொலை செய்யப்பட்டவருமான ஊடகவியலாளர் மேரி கொல்வினின் இறுதிநிகழ்வு நேற்று அமெரிக்காவில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் புலம்பெயர் தமிழர்களும் கலந்து கொண்டு இறுதி வணக்கம் செலுத்தியுள்ளனர்.
‘துணிச்சல்மிக்க ஊடகவியலாளர்களின் முடிசூடா ராணி‘ என்று புலம்பெயர் தமிழர்கள் மேரி கொல்வினுக்குப் புகழாரம் சூட்டியுள்ளதாக அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புலம்பெயர் தமிழர்களின் குழுவொன்று பெரியதொரு அமெரிக்க கொடியை ஏந்தியபடி இறுதி ஊர்வலம் ஆரம்பமான நியுயோர்க்கில் Oyster Bay இல் உள்ள மேரி கொல்வினின் வீட்டின் முன் திரண்டிருந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.
பின்னர் சென்.டொமினிக்கன் றோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் இடம்பெற்ற பிரார்த்தனைகளை அடுத்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
மேரி கொல்வினின் இறுதி நிகழ்வில பங்கேற்ற புலம்பெயர் தமிழர்களில் ஒருவரான சீதாராம் சிவம், மேரி கொல்வின் தமிழர்கள் மீதான வன்முறைகளை பத்தாண்டுகளுக்கு முன்னர் உலகின் கவனத்துக்கு கொண்டு வந்தவர் என்றும் அவருக்கு இறுதி வணக்கத்தைச் செலுத்த வேண்டியது தமது கடமை என்றும் கூறியுள்ளார்.
மிகவும் நெருக்கடியான சூழலில் போர் வலயங்களுக்குச் சென்ற அவர், தமிழர்களின் நிலை பற்றிய உண்மைகளை உலகிற்குக் கூறியவர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளதாக அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஊடகவியலாளர் மேரி கொல்வினின் இறுதி நிகழ்வில் பெருந்திரளான ஊடகத்துறையினரும், பொதுமக்களும் பங்கேற்றனர்.


No comments:
Post a Comment