இந்திய மற்றும் சிறிலங்கா அரசுகளின் கூட்டுச் சதிக்கு பலியாகியுள்ள அப்துல் கலாம்இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களை இந்திய மத்திய அரசு இதுவரை காலமும் பலிக்கடாவாக்கியே வந்துள்ளது. தனது துறை சாராத ஒரு பதவிக்கு அன்று இந்திய மத்திய அரசு நியமித்தது. அறிவியலில் குறிப்பாக அணு சக்தி துறையில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்று அத்துறையில் பலகாலமாக பணியாற்றிய கலாம் அவர்களை குடியரசுத் தலைவராக்க இந்திய மத்திய அரசிற்கு அன்று பல காரணங்கள் இருந்தது.
கலாம் அவர்கள் ஒரு இஸ்லாமிய மதத்தவர் என்பது ஒரு காரணம். அணுசக்தி துறையில் பாண்டித்துவம் உடையவரை குடியரசுத் தலைவராக்குவதனூடாக உலகநாடுகளின் நம்பிக்கையைப் பெற்று விடலாம் என்கிற கருத்து அன்று இந்திய அரசிற்கு இருந்தது. இந்தியாவின் அணுகுண்டுச் சோதனைக்குப் பின்னர் உலகநாடுகள் இந்தியா மீது விதித்திருந்த தடைகளை கலாம் குடியரசுத் தலைவராக இருந்த காலத்திலேயே விலக்கிவிட்டார்கள்.
கலாம் அவர்களை இந்திய அரசுகள் நன்றாகவே தமது அரசியல் மற்றும் இராஜதந்திரக் காய் நகர்த்தலுகளுக்காக பாவித்தார்கள், இன்னும் பாவித்துக் கொண்டே இருக்கிறார்கள். தமிழ் மக்கள் கலாம் மீது மதிப்பையும் மரியாதையையும் வைத்துள்ளார்கள் என்பதனை நன்கே அறிந்த மத்திய காங்கிரஸ் அரசு இவர் மூலமாக எதனை இந்திய மற்றும் சிறிலங்கா அரசுகள் செய்துமுடிக்க வேண்டுமென்று கருதுகிறதோ அதனை செய்துவிடலாம் என்கிற நோக்கிலேயே கலாம் நான்கு நாள் பயணமாக ஜனவரி 20, 2012 அன்று சிறிலங்கா சென்றடைந்தார். மகிந்தாவின் சிந்தனை முழக்கத்தின் வடிவமாக, சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழியை மையப்படுத்தி, மும்மொழி ஆண்டாக 2012-ஜ சிறிலங்கா அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. இப் பிரகடனத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வில் பங்கெடுப்பதே கலாமின் பிரதான நோக்கம்.
அன்று செய்ய முடியாததை இப்போது செய்யப் போகிறார்களாம்
உலகத்தை ஏமாற்றவும்இ தமிழ் மக்கள் மீது தனது அரசு அக்கறை கொண்டுள்ளது என்பதனை முன்வைத்து அரச தலைவர்கள்இ படை அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்ற மற்றும் பல மனிதவுரிமை குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பவுமே இப்படியானதொரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் மகிந்தா. இவ் மும்மொழி செயற்திட்டத்தை ஜனவரி 21, 2012-ஆம் நாளன்று ஆரம்பித்து வைத்தார் கலாம். சிறிலங்காவில் தமிழ், சிங்கள மொழிகளையும் ஆங்கிலத்தையும் பள்ளிக்கூட மட்டத்திலிருந்தே அனைவருக்கும் கற்பிப்பதன் மூலம் இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்த முடியும் என்கிறது அரசாங்கம்.
மும்மொழித் திட்டம் என்பது வரவேற்கத்தக்க விடயமே. ஈழத் தமிழரின் அரசியல் பிரச்ச்சினையுடன் இத்திட்டத்தை முடிச்சுப் போட்டுவிடக்கூடாதென்பதே உலகத் தமிழரின் கருத்து. ஈழத் தமிழரின் தாயகம் என்பது வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளே. பல இலட்சம் தமிழ் மக்கள் குறிப்பாக தமிழ் பேசும் ஈழத் தமிழர்கள், இஸ்லாமிய மதத்தவர்கள் மற்றும் மலைநாட்டுத் தமிழர்கள் சிறிலங்கா என்கிற நாட்டிலேயேதான் வாழப்போகிறார்கள். அவர்களுக்குத்தான் குறித்த திட்டம் பிரயோசனமாக இருக்குமே தவிர தமிழீழ நாட்டவருக்கு எவ்விதத்திலேயும் உதவப்போவதில்லை. தமிழீழ நாட்டவர் எதற்காக சிங்கள மொழியைக் கற்க வேண்டுமென்கிற கேள்வி எழுகிறது.
தமிழீழத்தில் குறைந்த சதவீத சிங்கள மொழி பேசும் மக்களே வாழ்கிறார்கள். அப்படியிருக்க எதற்காக அந்தப் பகுதிகளில் வாழும் தமிழர்கள் சிங்கள மொழியைக் கற்க வேண்டும். சில இலட்சம் தமிழர்கள் வாழும் இங்கிலாந்திலேயோ அல்லது பிரான்சிலேயோ தமிழ் அரச கரும மொழியாக இல்லை. அதைப்போலத்தான் தமிழீழத்தில் வாழும் சிங்களவர்களும் தமிழ் மொழியைத்தான் கற்றுக்கொண்டு வாழவேண்டுமென்கிற நியதி உள்ளது.
சிறிலங்கா விடயத்தில் வேறுவிதமாகத்தான் அணுக வேண்டும். இருநூறு வருடங்களுக்கு மேலாக மலையத் தமிழர்கள் அங்கு வாழ்கிறார்கள்;. அத்துடன், பல நூற்றாண்டுகளாக தமிழ் பேசும் இஸ்லாமியர் மற்றும் ஈழத்தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களின் அதீத பங்களிப்பினால்த்தான் சிறிலங்கா என்கிற நாடு கட்டியெழுப்பப்பட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது. தமிழீழ விடுதலைக்காக போராடியபோது எத்தனை சிங்கள பேசும் மக்கள் தமது உயிரை பணயம் வைத்து ஈழத்தமிழருடன் இணைந்து போராடினார்கள் என்று கேட்டால் எவரும் இல்லை என்றே கூற வேண்டும்.
1956-இல் தனிச் சிங்களச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே, அரசு கல்வித் திட்டங்களில் இருமொழிக் கொள்கை பற்றிய அக்கறை செலுத்தப்பட்ட போதிலும், காலப்போக்கில் அரசியல்வாதிகள் மொழிப்பிரச்சினையை முன்வைத்து அரசியல் நடத்த முன்வந்தமையால் அந்தத் திட்டங்கள் தோல்வியடைந்தன. போர் ஓய்ந்த பின்னரான இக்காலப்பகுதியில், இன நல்லிணக்கம் எனும் மாயைக்குள், தமிழர்களின் நியாயமான உரிமைப் போராட்டத்தை புதைக்கின்ற, சிங்கள தேசத்தின் நிகழ்சி நிரலில், இந்த மும்மொழி முழக்கமும் அமைகின்றது. இதற்கு பலிக்கடா ஆகிவிட்டார் கலாம் என்பதே உண்மை.
தனது வழக்கமான வேலைகளையும் செய்த கலாம்
பொதுவாகவே எங்கு சென்றாலும் பள்ளிகூட மற்றும் பல்கலைக்கழக மாணவர்களைச் சந்தித்து அவர்களுக்கு உட்சாகம் ஊட்டும் பேச்சுக்களை பேசுபவரே கலாம். சிறிலங்கா பயணத்தின் போதும் தனது வழக்கமான இக்குறித்த சந்திப்புக்களை மேற்கொண்டார். இந்தியாவைக் கட்டியெழுப்ப இளைஞர்களே கனவு காணுங்கள் எனும் அறைகூவல் விடுத்துவந்த கலாம் அவர்கள், சிறிலங்கா பயணத்தின் பொது சற்று மாறுதலான கருத்தை முன்வைத்தார். சுபீட்சமான சிறிலங்காவைக் கட்டியெழுப்ப இளைஞர்களுக்கு அறைகூவல் விடுக்கிறேன் என்கிற மந்திரத்தை அடிக்கடி தனது சந்திப்புக்களின் போது கூறினார் கலாம்.
இந்தியாவில் பலமொழிகள், பல கலாச்சாரங்கள் இருந்த போதிலும், ஜனநாயகம் எல்லா மக்களுக்கும் சமவுரிமையை உறுதி செய்கிறது. அதன் மூலம் அமைதியான வாழ்வை உறுதிப்படுத்த முடிகிறது என்று கூறிய கலாம், சிறிலங்காவில் இருதரப்பு தலைவர்களையும் சந்தித்து பரஸ்பர நம்பிக்கையை கட்டியெழுப்புவது குறித்து பேசியதாக கூறினார் கலாம். போருக்குப் பின்னர் இரு பகுதியினருக்குமிடையில் நம்பகத்தன்மையை கட்டியெழுப்புவது இன்றியமையாத முக்கிய பணி என்று கூறிய கலாம், தான் இதனையே செய்ததாகக் கூறினார்.
அரசியல் அறிவின்மையையே கலாம் அவர்களுடைய பேச்சுக்கள் எடுத்துக்காட்டுகிறது. இந்தியா என்கிற நாட்டில் பல இன, மத, மொழி பேசும் மக்கள் வாழ்கிறார்கள். நியூடெல்லியை மையமாகக் கொண்ட அரசு ஒட்டுமொத்த மக்களையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் தொடர்ந்து வைத்திருக்க நினைத்திருக்குமேயானால், இந்தியா என்கிற நாடு ஏறத்தாள 30 நாடுகளுக்கு மேலாக பிரிந்து இன்று இனம்இ மொழி அல்லது மத சார்பிலான நாடுகளாக எப்போதே பிரிந்திருக்கும் என்பதனை கலாம் அவர்கள் உணராமல் பேசியுள்ளார்.
கூட்டாட்சி அரசியலமைப்பை உருவாக்கி அதிகாரங்களை மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்ததன் காரணமாகத்தான் இந்தியா இந்தியாவாக இந்திய உபகண்டத்தில் பிரியாமல் இன்றும் இருக்கிறது என்பதனை கலாம் அவர்கள் உணராமல் போய்விட்டதுதான் வருத்தம். சிறிலங்கா அப்படியான கூட்டாட்சியை பல தசாப்தங்களுக்கு முன்னர் செய்திருந்தால் இன்று மனித மற்றும் பொருள் பேரழிவுகளைத் தவிர்த்திருக்கலாம் என்பதனை சிங்கள அரசிற்கு சொல்லாமல் சென்றுவிட்டார் கலாம் என்பதுதான் உலகத்தமிழருக்கு ஆச்சரியமாக உள்ளது.
ஜனவரி 23-ஆம் நாளன்று யாழ்.குடாநாட்டிற்கான பயணத்தை மேற்கொண்டு யாழ்.பல்கலைக்கழகம், மற்றும் யாழ்.இந்துக் கல்லூரி ஆகியவற்றுக்கு விஜயம் செய்ததுடன், அரசியல்வாதிகள், மற்றும் பத்திரிகை ஆசிரியர்களை யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் சந்தித்து உரையாடினார்.
யாழ்.பல்கலைக்கழகத்திற்கு சென்று அங்குள்ள பெருமளவு மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய கலாம், “இளைஞர்களுக்கு கனவு என்பது மிக முக்கியமானதொரு கடமையாகும், அந்த கனவு தூக்கத்தில் வருவதல்ல உங்களை தூங்கவிடாது செய்வதே கனவு”. கனவு காணுங்கள், அந்த கனவுகளை நனவாக்குவதற்கு உச்சக்கட்ட முயற்சியும் செய்யுங்கள், அதன் மூலம் உங்கள் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், நாட்டிற்கும், பொறுப்புள்ள பெறுமதியான மனிதர்களாக உருமாறுங்கள், இதேபோல் திருக்குறள் எனது வாழ்வின் பெறுமதியான வாழ்க்கைச் சித்ததாந்தமாகிப் போனது அதுவே எனது வாழ்வின் ஏற்றத்திற்கு உரமாக இருந்தது என்று கூறினார் கலாம்.
அவர் மேலும் பேசுகையில் அறிவுப்புரட்சி ஒன்றே சமுதாய மாற்றத்திற்கு ஓரே வழியாகும், அதுவே சமத்துவமானதும், சமாதானமானதுமான சமூகத்தை உருவாக்கும் எனக் கூறினார். யாழ்.இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற சந்திப்பில் சுமார் 1000-த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட நிழவில் பேசினார் கலாம். இவ் நிகழ்வில் மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து பேசியதுடன், மாணவர்களுக்கான அறிவுரைகளையும் வழங்கினார். இது குறித்து பின்னர் பத்திரிகையாளர்களுடன் பேசிய கலாம், “நான் யாழ்ப்பாணத்திற்கு சென்று இந்துக் கல்லூரி மாணவர்களைச் சந்தித்து உரையாடிய போது மாணவி ஒருவர் பொறுப்புள்ள பிரஜையாக திகழ நான் என்ன செய்யவேண்டும் என என்னிடம் கேள்வியெழுப்பினார். அவ்வாறு திறமைவாய்ந்த மாணவியை நான் முன்னர் ஒருபோதும் சந்தித்தது கிடையாது” என்றார் கலாம்.
தனது பயணத்தின் போது கிளிநொச்சி மற்றும் காலி போன்ற இடங்களுக்கும் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்த பின்னர் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவிக்கையில், “அப்துல் கலாம் யாழ்ப்பாண விஜயம் தொடர்பாக தனது பூரண திருப்தியை என்னிடம் வெளியிட்டார். பல்கலைக்கழகத்திலும், யாழ். இந்துக் கல்லூரியிலும் மாணவர்கள் தன்னை உற்சாகமாக வரவேற்றதாகவும், பயணம் திருப்தியளிக்கும் வகையில் அமைந்ததாகவும் தெரிவித்தார். அத்துடன் அங்கு ஆற்றிய உரையின் நகலினையும் என்னிடம் கையளித்தார். அத்துடன் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பாக பல விடயங்கள் அவருடன் பேசப்பட்டன. அவரும் தற்போதைய நிலைமைகளினை அறிவதில் ஆர்வம் செலுத்தினார்.”
மேலும் சம்பந்தன் கூறுகையில், “அரசியல் கட்சிகளினது நிலைப்பாடுகள், அரசியல் தீர்வு தொடர்பாகவும் அவர் என்னிடம் கேட்டறிந்து கொண்டார். ஜனாதிபதி ராஜபக்சாவுடனான சந்திப்பின் போது பரிமாறப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் அவர் எனக்குத் தெரிவித்தார். தங்களுடைய பங்களிப்பு தொடர்ந்து இருக்க வேண்டும். இனப் பிரச்சினையை தீர்ப்பதில் நீங்கள் அக்கறை செலுத்தினால் அதன் மூலம் அதிகளவான நன்மைகள் கிடைக்கும். எனவே தாங்கள் தொடர்ந்து பங்களிப்பு செய்ய வேண்டும். இந்தியாவினது பங்களிப்பும் முக்கியமாக தொடர்ந்து இருக்க வேண்டும். இந்தியாவின் பங்களிப்பு இருந்தால்தான் இனப்பிரச்சினையை தீர்க்க முடியும் என்று அவரிடம் நான் கோரினேன். இதற்கு கலாம், தான் தொடர்ந்தும் அக்கறையுடன் இது குறித்து கருத்துத் தெரிவிப்பதாகக் கூறினார்” என்று தெரிவித்தார் சம்பந்தன்.
எது என்னவென்றாலும் இந்திய மற்றும் சிங்கள ஆட்சியாளர்களின் வலையில் சிக்கித் தவிக்கிறார் அப்துல் கலாம் என்பதே உண்மை. தனக்கு சமூகத்தில் இருக்கும் மரியாதையையும், அன்பையும் தானே கெடுக்க முயல்கிறார் கலாம் என்றால் மிகையாகாது. சம்பந்தன் அவர்கள் ஒரு சட்ட அரசியல்வாதி. அவர் சமூக அரசியல் நீரோட்டத்தின் அடிப்படையிலேயே காய்நகர்த்தலை மேற்கொள்வார். கலாம் அவர்கள் அப்படியல்ல. அவருக்கு தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் மரியாதை என்பது அவருடைய அறிவியல் பாண்டித்துவத்திற்கும், தமிழனாகப் பிறந்து தமிழுக்கும் தமிழனுக்கும் நற்பெயரைத் தேடித்தந்தார் என்கிற மதிப்பு உண்டு. தமிழனுக்கு நற்பெயரைத் தேடித்தந்த கலாம் போன்றவர்கள் தமிழனுடைய அழிவிற்கும் காரணமாகிவிடக் கூடாதென்பதுதான் உலகத்தமிழர்களின் விருப்பம்.
அனலை நிதிஸ் ச. குமாரன்


No comments:
Post a Comment