
ஈழத் தமிழர்களின் நலனில் அக்கறையிருந்தால், அவர்களின் மறுவாழ்வு பற்றி பேசுங்கள், அதை விட்டுவிட்டு, போர்க் குற்றம், பன்னாட்டு விசாரணை என்றெல்லாம் பேசுவது பயன்றறது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபய அறிவுரை கூறியுள்ளார்.
ஹெட்லைன்ஸ் டுடே ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கோத்தபய இவ்வாறு கூறியுள்ளார்.
அதில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கோத்தபய, அது அரசியல் ஆதரவு பெறுவதற்கான முயற்சி என்று கூறியுள்ளார்.
தீர்மானம் நிறைவேற்றியதெல்லாம் அரசியல் ஆதரவைப் பெருக்கிக்கொள்ளும் முயற்சி. உண்மைகளை அறியாமல் நிறைவேற்றப்பட்ட அர்த்தமற்ற தீர்மானங்கள். ஜெயலலிதாவிற்கு தமிழர்கள் மீது அக்கறை இருக்குமானால், இலங்கையின் கடற்பரப்பிற்குள் வந்து தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பதை தடுத்து நிறுத்தட்டும். அதை அவர் முதலில் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
இலங்கை நிலவரம் தொடர்பான விஷயங்களை நாங்கள் ஜெயலலிதாவிற்கு அளிக்க வேண்டும். தமிழர்கள் அவர்கள் வாழ்ந்த இடங்களில் மீள் குடியமர்த்தப்பட வேண்டும், மறுவாழ்வு தரப்பட வேண்டும், அதுதான் முக்கியமானது.
அதை விட்டுவிட்டு போர்க் குற்றம் என்றெல்லாம் பேசுவது எந்தப் பயனையும் தராது. அந்த மக்கள் குடியேற உதவ வேண்டும். அதை விட்டுவிட்டு, போர்க் குற்றம் பற்றிப் பேசுவது, பன்னாட்டு விசாரணை கோருவது என்பதெல்லாம் வீணானது என்று மற்றொரு கேள்விக்கு கோத்தபய பதிலளித்துள்ளார்.
சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இலங்கையின் கொலைக் களங்கள் என்ற ஆவணப்படம் போலியானது, அந்த தொலைக்காட்சியின் நடவடிக்கை நேர்மையற்றது என்று கூறிய கோத்தபய, இலங்கை ஒரு சர்வாதிகார நாடல்ல, ஜனநாயக நாடுதான் என்றும், அங்கு சட்டத்தி்ன் ஆட்சிதான் நடக்கிறது என்றும் கூறிவிட்டு, பன்னாட்டு விசாரணைக்கு எந்த விதத்திலும் ஒப்புக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.
நாங்கள் ஒரு இறையாண்மை உள்ள நாடு, நாங்கள் கூறுவதை பன்னாட்டுச் சமூகம் நம்ப வேண்டும். எந்த ஒரு இறையாண்மை உள்ள நாடும் பன்னாட்டு விசாரணைக் குழுவை அனுமதிக்காது என கோத்தபய கூறியுள்ளார்.


No comments:
Post a Comment