'வழக்கு எண் 18/9 ' பார்த்துவிட்டீர்களா? பாருங்கள்... நீங்கள் அந்தப் படத்தைப் பார்ப்பது சமூக சித்தரிப்புகளால் தண்டனைக்கும் அவலகத்துக்கும் ஆளாகித் தவிக்கும் எத்தனையோ பேருக்குச் செய்யும் சிறு ஆறுதலாக இருக்கும். வறுமை என்கிற அடையாளம் எத்தகைய கொடுமைகளுக்கு எல்லாம் ஒருவனை ஆளாக்கி விடுகிறது என்பதற்கு இந்தப் படத்தின் கதாநாயகன் ஓர் உதாரணம்.
'சார், அந்தஸ்தான குடும்பத்துக்கார பையனை விடுவிச்சிடுங்க... வேற யாரையாச்சும் அந்த கேசுல சேர்த்திடுங்க... அதுக்கு என்ன ஆகுமோ அதைத் தயங்காம கேட்டு வாங்கிக்கங்க...' என சர்வசாதாரணமாக ஒரு போன் காலில் அப்பாவி ஒருவனின் எதிர்காலம் சிதைக்கப்படும் அவலத்தை இதைவிட பொளேரென எவராலும் சொல்ல முடியாது.
'நாங்களும் வாழ்கிறோம்' என்கிற கணக்கில் இந்த தேசத்தில் எத்தனை பேர் வாழ்கிறார்கள்... அவர்களைத் திரும்பிப் பார்க்கும் சிறுகண ஆர்வம்கூட நமக்கு வந்தது இல்லை. ஆனால், தன் படத்தின் களமாக - தன் சிந்தனையை இறக்கி வைக்கும் தளமாக பாலாஜி சக்திவேல் அந்த ஜீவன்களின் மேல் கருணைக் காட்டியிருக்கிறார். அவர்களின் வாழ்வியலை மனிதர் எங்கிருந்துதான் கூர்ந்தாரோ... அவர்களின் அனுதின நகர்வுகளையும், ஆசாபாசங்களையும், காயங்களையும், எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் சமரசத்தனத்தையும் அப்படியே கண்ணில் வார்க்கிறார் பாலாஜி சக்திவேல்.
அதிகம் படிக்காத - தன்னைப் பற்றிய அக்கறை இல்லாத விழிம்பு நிலை ஜீவன்களிடம் தான் மனிதாபிமானம் நிலைத்திருக்கிறது என்பதை தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிவிக்கும் பாலியல் பெண் மூலமாக காட்சிப்படுத்துகிறார் பாலாஜி. அந்தப் பெண் போதைக்காக ஏங்கி நிற்கும் சூழலையும், அவள் கையில் பணத்தைத் திணித்து 'அக்கா, இனிமேல் தண்ணி அடிக்காதக்கா' என கதாநாயகன் கலங்குவதும், பிறரின் பார்வையில் அந்தப் பரிமாற்றம் எவ்வளவு கேவலமாகப் பார்க்கப்படுகிறது என்பதையும் அதிநுட்பமாக பதிவு செய்திருக்கிறார் பாலாஜி. மிக அருகில் நின்று கவனிக்கப்படும் விஷயங்கள் கூட நம் யூகிப்புக்குத் தக்கபடியே எப்படி தவறான தோற்றம் தருகின்றன என்பதற்கு அந்த ஒரு ஷாட் போதும்!
இந்தப் பாத்திரங்களை இன்னும் கொஞ்ச நேரம் கேமிரா பின்தொடராதா என்கிற ஏக்கத்தை தவிர்க்கவே முடியவில்லை. தெருவோரக் கடைக்காரர், அங்கே வேலை செய்யும் அபலைத் தொழிலாளர்கள், அவர்களைக் கடந்துபோகும் அழுக்கு மனிதர்கள், பெரிய குடும்பத்துக்கு வேலைக்குச் செல்லும் சிறுமி என ஒவ்வொரு பாத்திரங்களின் மீதும் நம் பயணம் பரிதாபத்துடனேயே தொடர்கிறது. இடைவேளை வரை இந்த பாராமுக மனிதர்களின் பக்கம் நம் பார்வையை நிலைத்திருக்க வைத்திருக்கிறார் பாலாஜி சக்திவேல். அறிந்தோ அறியாமலோ இந்த எச்ச மனிதர்களுக்கு அவர் செய்திருக்கும் சேவை இது! புறந்தள்ளப்பட்ட இப்படியொரு சமூகத்தைக் கடந்துதான் நம் அனுதின அவசரங்களும், சாதிப்புகளும், சந்தோஷங்களும் பிரயாணிக்கின்றன என்பது எத்தனை பேருக்குப் புரியும்?
கல்வித்தந்தை அவதாரம் சுமக்கும் பெண்ணில் ஆரம்பித்து முகம் இருட்டடிக்கப்பட்ட அரசியல்வாதி வரை மேல்தட்டு மிருகங்களை தோலுரித்து தொங்கவிட்டிருக்கும் பாலாஜிக்கு இந்தப் படம் நிச்சயமாக மரியாதைக்குரிய மைல்கல். பாலியல் குரூரங்களும், சேட்டைகளும் மிக மலினமாக மாறிவிட்ட நிலையில், ஒரு மாணவி பத்திரமாகத் திரும்புவது சாத்தியமற்றது என்பதை ஒரு தகப்பனாக அறிவுரைத்திருக்கிறார் பாலாஜி.
பணத்துக்காக பகடைக்காயாக உருட்டப்படும் ஒரு அப்பாவியின் அவலத்தை இதைவிட உருக்கமாக - உண்மையின் சாட்சியாக வேறு எவராலும் சொல்ல முடியாது. எதையும் தாங்கித் தாங்கியே பழக்கப்பட்ட ஜீவன்கள் திருப்பு அடித்தால் எப்படி இருக்கும் என்பதையும் திராவகத்தின் உக்கிரத்தோடு பதிவாக்கிப் பதற வைத்திருக்கிறார் பாலாஜி.
தமிழ் சினிமாவுலகின் சாலச்சிறந்த அடையாளம் இயக்குனர் பாலா. ஆனால், அவர் கையிலெடுக்கும் களங்கள் இதுவரை நாம் பார்க்காததும், பயணிக்காததுமாக இருக்கும். சுடுகாட்டில் பிணம் எரிக்கும் தொழிலாளியை நாம் தொடர்ந்தது இல்லை. பிச்சைக்காரர்களின் பின்னணியை அலசியது இல்லை. கூத்துக்காரர்களை குடும்பம் வரை அணுகியது இல்லை. ஆனால், பாலாஜி சக்திவேலின் களங்கள் அன்றாடம் நாம் பார்ப்பவை. டூ வீலர் மெக்கானிக் தொடங்கி தெருவோர தள்ளுவண்டி உணவுக்காரர் வரை நம் அருகாமையில் இருப்பவர்கள். நம்மோடு பேசுபவர்கள். ஆனால், அவர்களின் இயக்க ஊர்தலை நாம் ஒருபோதும் உணர்ந்ததே இல்லை. தினமும் சாப்பிடும் தள்ளுவண்டிக் கடை ஒரு நாள் சார்த்திக் கிடந்தால் , என்னவோ எதோ என நினைத்து நாம் பதறுவது இல்லை. பாசாங்கற்ற அந்த மனிதர்களுக்காக நொடி நேரத்தைக்கூட நாம் வீணடித்தது இல்லை. களங்களைக் கையாளும் விதத்தில் பாலாஜி சக்திவேல் அவர்களை பாலா - ஜீ என்றால் மிகப் பொருத்தமாக இருக்கும்!
எவரிடத்தில் சொல்லி இருந்தாலும் நிச்சயம் நிராகரிப்பட்டிருக்கும் இப்படியொரு ஆத்மார்த்த கதையை மிக தைரியமாகத் தயாரித்த இயக்குனர் லிங்குசாமியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மனிதாபிமானத்தின் சாட்சியாக இருக்கும் இரு மனிதர்களின் உருவாக்கத்தில் வெளியாகி இருக்கும் வழக்கு எண் தமிழ் சினிமாவின் கிழக்கு எண்!
- கும்பல் சினிமா குழு
No comments:
Post a Comment