அஸ்வரின் பேச்சில் இரண்டு விடயங்கள் இருக்கின்றன:
விடுதலைப் புலிகள் தலைவரின் மனைவியும், பிள்ளைகளும் இப்போது உயிருடன் இல்லை என்பதை சிறீலங்கா அரசு உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்குப் பதிலாக இப்படியொரு நாடகத்தை அரங்கேற்றியதா என்ற கோணத்தில் பார்த்தால்..
அவர்கள் உயிருடன் இல்லை என்பதை அரசு நேரடியாக சொல்லாமல் அஸ்வர் மூலம் மறைமுகமாக சொல்லி முடித்திருக்கிறார்கள் என்று கருத இடமிருக்கிறது – இது நாணயத்தின் ஒரு பக்கம்:
இனி நாணயத்தின் மறு பக்கம்:
அஸ்வர் கொடுக்க முனைந்த உதாரணத்திலும் வசன ஒழுங்கிலும் சிந்தனைப் பிழையும், கருத்துப் பிழையும் இருக்கின்றன. ஒஸாமா பின்லேடனின் மனைவி கொல்லப்படுவதை அமெரிக்க அதிபர் பார்த்து ரசித்தார். ஆனால் மகிந்த ராஜபக்ஷவோ பிரபாகரனின் மனைவி பிள்ளைகளை கொல்லாது பாதுகாத்தார் என்பது அஸ்வர் அமைத்துக் கொண்ட பேச்சின் ஒப்புமை.
ஒபாமாவுடன் ஒப்பிட்டால் மகிந்த ராஜபக்ஷ உயர்ந்தவர் என்பதை உறுதி செய்ய இந்த உதாரணத்தை அவர் பயன்படுத்தினார்.
ஆனால்:
பின்னர் கருத்துரைத்த அஸ்வர் தமிழ்செல்வனின் மனைவி என்று கூறுவதற்குப் பதிலாக பிரபாகரனின் மனைவி என்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். இங்குதான் அஸ்வரின் தவறு ஆரம்பிக்கிறது.
அஸ்வரின் தவறு:
பாராளுமன்ற பேச்சை மண்டைக்குள் வடிவமைக்கும்போது வடிகட்டிய முட்டாள் கூட பின்லேடனையும், தமிழ்செல்வனையும் ஒன்றாக நோக்கமாட்டான்.
தமிழ்செல்வன் விடுதலைப்புலிகள் தலைவரல்ல அவர் வன்னிப் போருக்கு முன்னரே கொல்லப்பட்டுவிட்டார். அவர் விடுதலைப்புலிகள் சமாதான செயலகத்தைச் சேர்ந்தவர். இந்த உதாரணத்திற்குள் அவரை கொண்டு வந்ததாகக் கூறுவதில் பாரிய தவறு இருக்கிறது.
மேலும் தமிழ்ச்செல்வனின் மனைவியை ஜனாதிபதி தனிப்பட கண்காணிப்பதற்கு யாதொரு தேவையும் இல்லை. பொது மக்களோடு பொதுமக்களாக அவரும் கைதானார், அவ்வளவுதான்.
அவரை பின்லேடனின் மனைவியுடன் ஒப்பிட முடியாது. பின்லேடனுக்கு எத்தனையோ மனைவிகள் உண்டு..
இப்படியான பின்னணியில் பார்த்தால் அஸ்வர் வாய்தடுமாறிச் சொல்லியிருப்பார் என்று நம்ப முடியவில்லை.
ஆனால்.. இடையில் ஒரு சிறிய சரடு..
ஐ.நாவின் அறிக்கைக்கு பதிலளிக்க சிறீலங்கா எடுக்கும் எத்தனங்களில் இதுவும் ஒன்றாக இருந்திருக்கலாம். பின்னர், அழுத்தங்கள் காரணமாக அஸ்வர் மறுத்திருக்கலாம் என்று எண்ணத்தைத் திருப்புகிறது அந்தச் சரடு.
மறுபுறம்:
உண்மையாகவே அஸ்வர் தவறாக உரைத்திருந்தால் உடனடியாக மறுத்திருக்க வேண்டும்.
பாராளுமன்றில் பிழையான தகவல் ஒன்று சொல்லப்படும்போது சபாநாயகரின் கடமை என்ன.. 24 மணி நேரம் காத்திருப்பதா..?
கேள்வி கேட்க எதிர்க்கட்சிகள் அவையில் இல்லை என்றால் சபாநாயகரின் கடமை என்ன..? ஆளும் கட்சியில் இருந்தவர்கள் ஏன் பொம்மைகளாக இருந்தார்கள்…?
அஸ்வரின் பேச்சுக்கள் இவ்வாறான கேள்விகளை புயல்போல கிளப்புகின்றன..
மறுபுறம்:
பிரபாகரன் எங்கே என்ற கேள்விக்கு சரியான பதில் இதுவரை இல்லை..
அவருடைய மனைவியும் இரண்டு பிள்ளைகளும்கூட எங்கேயென்று தெரியவில்லை..
இந்தக் கேள்விகள் பதிலின்றி நீண்டு சென்றால் சர்வதேச போர்க்குற்ற கயிறு சிறீலங்காவின் கழுத்தில் இறுகிவிடும். இந்த நிலையில் சிறீலங்கா அரசு தப்பிக் கொள்வதற்காக அஸ்வர் என்ற ஏவல் பேயை ஏவிவிட்டுள்ளதா..?
இல்லை
அந்த ஏவல் பேயே பின் வாய் தடுமாறிக் கூரையைப் பிடுங்கியதா..?
இப்படி பல கோணங்களில் இதைப் பிரித்துப்பிரித்துப் பார்க்கலாம்.
2009 மே 17 – 18ம் திகதிகளில் நடந்த விடங்களில் மறைக்கப்பட்ட ஓர் உண்மையைப் போட்டுடைக்கப் போவது யார்..? மகிந்த அரசா இல்லை சனல் 4 தொலைக்காட்சியா..? என்ற கேள்விக்கான பதிலுக்கு வெள்ளோட்டம் போலவே அஸ்வரின் பேச்சு ஒளி காட்டுகிறது.
சனல் 4 தொடரும் என்று ஜி.எல் பீரீஸ் கூறியிருப்பதைப் பார்த்தால் உண்மை உடையும் நாட்கள் தொலைவில் இல்லை என்றும் உணர முடிகிறது.
நிறைவாக:
அஸ்வரின்:
உடல் மொழி..
குரல் மொழி..
அவர் பேசிய வசனத்தில் எழுவாய், பயனிலை செயற்படுபொருள் ஒழுங்குகள் பொருந்திய விதம்..
வசனத்தில் உவமானத்தை பதிவு செய்த விதம்..
இவைகளை வைத்துப் பார்த்தால் அவர் வாய் தடுமாறியதாகக் கூறுவதை நம்பமுடியவில்லை..
அவரின் வசன ஒழுங்கில் தமிழ்ச்செல்வனின் மனைவியை பொருத்திப் பார்க்க முடியாது.
நுணலும் தன் வாயால் கெடும்..!
பிரபாகரனும் அவருடைய குடும்பம் பற்றிய மர்மமும் மூங்கில் இலை நுனியில் தூங்கும் பனிநீர்க் குடம் போல ஆடுகிறது. அது விரைவில் கீழே விழப்போகிறது..
அஸ்வருக்கு ஜே..!
சிந்தனையாளன் - அலைகள் 25.06.2011
No comments:
Post a Comment