![](http://1.bp.blogspot.com/-7vL90z7vXbI/TkdTHlxpBRI/AAAAAAAABE0/E_d9Vh_Ja0w/s200/us%2Bjeat.jpg)
அமெரிக்காவின் எச்சரிக்கைகள் அடுத்தடுத்து வந்து கொண்டிருந்த நிலையில் தான் அமெரிக்கப் போர் விமானங்கள் இலங்கையின் வான்பரப்புக்குள் அத்துமீறியதான செய்தி கடந்தவாரம் வெளியாகியது.அமெரிக்காவின் விமானம் தாங்கிப் போர்க்கப்பலான “யூ.எஸ்.எஸ். ரொனால்ட் கன்“ இல் இருந்து பயிற்சிக்காகப் புறப்பட்ட 10 போர் விமானங்கள் இலங்கையின் வான் எல்லைக்குள் அனுமதியின்றி அத்துமீறிப் பிரவேசித்ததாகவும், இலங்கை அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கையை அடுத்து அவை வெளியேறிச் சென்று விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
முதலில் இந்த ஊடுருவலை சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளும், விமானப்படை அதிகாரிகளும் உறுதி செய்தனர். இது குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும், அமெரிக்காவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்படும் என்றும் அரசாங்க வட்டாரங்கள் கூறின.
விமானப்படைப் பேச்சாளர் குரூப் கப்டன் அன்ரூ விஜேசூரிய, அமெரிக்கப் போர் விமானங்கள் தற்செயலாகவே ஊடுருவியதாகக் குறிப்பிட்டார். இதற்கு அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் ஒருவர் மறுப்புத் தெரிவித்தார். ஆனாலும், விமானப்படைப் பேச்சாளர் விடவில்லை. அமெரிக்கப் போர் விமானங்கள் ஊடுருவியது உண்மையே என்று சாதித்தார்.
இந்த நிலையில், இலங்கை வான்பரப்புக்குள் அவ்வாறான ஊடுருவல் எதுவும் இடம்பெறவில்லை என்று அமெரிக்கத் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஆனாலும், அரசதரப்பு விடுவதாக இல்லை. ஊடுருவல் நடந்தது உண்மையே. ஆனால், உள்நோக்கம் ஒன்றும் இல்லை என்பது போல கூறிக் கொண்டிருந்தது.
இந்த நிலையில் ஜே.வி.பி., தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் போன்றன அமெரிக்கா உளவு பார்க்க வந்துள்ளதாகப் பிரசாரம் செய்யத் தொடங்கின. இந்தப் பிரச்சினை தீவிரமான கட்டத்தை அடைந்த நிலையில் தான் நாடாளுமன்றத்தில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன திடீரென அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அமெரிக்கப் போர் விமானங்கள் இலங்கையின் இறையாண்மைக்குட்பட்ட எல்லைக்குள் அத்துமீறிப் பறக்கவில்லை என்றும், அவை கொழும்பு விமானத் தகவல் பிராந்தியத்துக்குள் தான் பிரவேசித்தன என்றும் அவர் அறிவித்தார்.
கொழும்பு விமானத் தகவல் பிராந்தியத்துக்குள் எவரும் நுழையலாம் என்றும் அதற்கு அனுமதி பெறத் தேவையில்லை என்றும் கூறிய அமைச்சர், கரையோரத்தில் இருந்து 12 கடல்மைல் தொலைவு வரையே இலங்கைக்குச் சொந்தமானது என்றும் அவர் விளக்கமளித்தார்.
ஒரு நாட்டின் இறையாண்மைக்குட்பட்ட வான்பகுதிக்கும் விமானத் தகவல் பிராந்திய எல்லைக்கும் இடையில் வேறுபாடுகள் இருப்பதாகவும் அவர் நியாயப்படுத்தினார். இதையடுத்து அரசாங்கம் கூறியது பொய்யா அல்லது விமானப்படை கூறியது பொய்யா என்று கேள்வி எழுப்பியுள்ளார் சோமவன்ஸ அமரசிங்க.
பத்து அமெரிக்கப் போர் விமானங்கள் இலங்கையின் வான் எல்லைக்குள் பிரவேசித்தன என்று உறுதி செய்தது விமானப்படை தான். அரசாங்கம் அதை நிராகரித்துள்ளதன் மூலம் விமானப்படையின் கூற்று பொய்யாகியுள்ளது.
ஒன்றில் விமானப்படை பொய் கூறியுள்ளது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது விமானப்படைக்கு இறையாண்மைக்குட்பட்ட வான் எல்லைக்கும், கொழும்பு வான் தகவல் பிராந்திய எல்லைக்கும் இடையில் வேறுபாடுகள் இருப்பது தெரியாமல் இருக்க வேண்டும்.
பிதுருதலாகல மலையின் உச்சியில் அமைந்துள்ள ரேடரில் தான் இந்த ஊடுருவல் முதலில் பதிவானதாகக் கூறப்பட்டது. ஆனால், இந்த ரேடர் விமானப்படைக்குச் சொந்தமானதோ, அதன் கட்டுப்பாட்டில் இருப்பதோ அல்ல.
இரத்மலானை விமான நிலையக் கட்டுப்பாடு அறையுடன் தொடர்புடைய, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் கீழ் தான் இந்த ரேடர் உள்ளது. இந்த ரேடர் நிலையத்தில் இருந்து 200 கடல் மைல் தொலைவு வரையான வான் பிராந்தியத்தைக் கண்காணிக்கலாம்.
அமெரிக்கா தனது அறிக்கையில் இலங்கை தனது எல்லைக்கு வெளியே அமெரிக்கப் போர் விமானங்களின் பறப்பை அவதானித்திருக்கலாம் என்று கூறியபோது, விமானப்படைப் பேச்சாளர் தமது ரேடரின் கண்காணிப்புத் திறன் உள்ள பகுதி வரை கண்காணிப்போம் என்று முகத்தில் அடித்தாற்போலக் கூறியிருந்தார்.
விமானப்படை இந்த ஊடுருவலை எவ்வாறு கண்காணித்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால், இலங்கை விமானப்படையிடம் உள்ள ரேடர்கள் அனைத்துமே குறைந்த மற்றும் நடுத்தர உயரத்தில் பறக்கும் விமானங்களை மட்டுமே கண்காணிக்கும் திறன் கொண்டவை.
சீனத் தயாரிப்பு முப்பரிமாண ரேடரும் சரி, இந்தியத் தயாரிப்பு இரு பரிமாண ரேடர்களும் சரி அதிக தொலைவுக்கு உணரும் திறனோ அல்லது அதிக உயரத்தில் பறக்கக் கூடிய அமெரிக்கப் போர் விமானங்களை கண்காணிக்கும் திறனையோ கொண்டிருக்க வாய்ப்பில்லை.
இந்த ரேடர்கள் புலிகளின் சிறிய விமானங்களைக் கண்காணிக்க வாங்கப்பட்டவையே தவிர, வெளிநாட்டுப் போர் விமானங்களைக் கண்காணிப்பதற்கானவை அல்ல. ஆனாலும், விமானப்படைப் பேச்சாளர் அமெரிக்கப் போர் விமானங்கள் ஊடுருவியது உண்மையே என்று உறுதியாகக் கூறிவந்தார். இதை அவர் எதன் அடிப்படையில் கூறினார் என்பது தெளிவில்லை.
அதேவேளை, இதில் உள்நோக்கம் இருக்க வாய்ப்பில்லை என்றும் தற்செயலாகவே ஊடுருவியிருக்கலாம் என்றும் அவர் கூறியது தான் வேடிக்கையான விடயம். ஏனென்றால், அமெரிக்கப் போர் விமானங்கள் அதிநவீனமானவை.
அவற்றில் எங்கு பறக்கிறோம், யாருடைய எல்லைக்குள் நுழைகிறோம் என்ற உணர்திறன் வசதிகள் கூட இல்லை என்ற வகையில், விமானப்படை கூறப்பட்டுள்ளது. ஒரு தேர்ச்சிமிக்க விமானப்படை என்று கூறும் இலங்கை விமானப்படை இப்படி சிறுபிள்ளைத்தனமாக கருத்தை வெளியிடுவது அழகல்ல.
அதுவும் ஒரு விமானம் தற்செயலாக நுழைந்திருந்தாலும் பரவாயில்லை. 10 விமானங்கள் ஊடுருவின என்று கூறியது தான் ஆச்சரியம். அவ்வாறு 10 விமானங்களுக்கும் இலங்கையின் எல்லைக்குள் நுழைகிறோம் என்று தெரியாமல் போயிருக்காது.
அவ்வாறு 10 போர் விமானங்கள் நுழைந்திருந்தால், அதற்கு நிச்சயம் ஒரு உள்நோக்கம் இருக்கிறது என்றே அர்த்தம் கொள்ள வேண்டும். எவ்வாறாயினும், அமெரிக்கா திரும்பத் திரும்ப, தாம் எல்லை மீறவில்லை என்று அழுத்திக் கூற அரசாங்கம் வழிக்கு வந்து விட்டது.
ஆனாலும், அமெரிக்கப் போர் விமானங்கள் ஊடுருவியது உண்மையா...? பொய்யா...? என்ற கேள்வியும் சந்தேகம் பலரிடம் இருக்கவே செய்கின்றன. அமெரிக்காவின் அழுத்தங்களும் எச்சரிக்கைகளும் இலங்கைக்கு அதிகரித்து வருகின்ற நிலையில், இத்தகைய சம்பவம் நிகழ்ந்திருந்தாலும் சரி அல்லது நிகழாமலேயே போயிருந்தாலும் கூட விவகாரமாக்கப்படுவதில் ஆச்சரியம் இல்லை.
அதிலும், தற்செயலாகவே நிகழ்ந்திருந்தாலும் கூட இதற்கு உள்நோக்கம் கற்பிக்கப்படும் என்பதிலும் சந்தேகம் இல்லை. அமெரிக்க விமானம் தாங்கிப் போர்க்கப்பலான ““யூ.எஸ்.எஸ். ரொனால்ட் கன்'' பசுபிக்கில் இருந்து இந்து சமுத்திரத்துக்கு நகர்த்தப்பட்ட நிலையில் தான் அமெரிக்கப் போர் விமானங்கள் எல்லை மீறியதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தப் போர்க்கப்பலின் நகர்வு இலங்கைக்கு ஒருவேளை அச்சத்தைக் கொடுத்திருக்கலாம். சிங்களத் தேசியவாதிகள் சிலர், அமெரிக்கா முற்றுகையிட வேவு பார்ப்பதாக அச்சம் வெளியிட்டுள்ளனர். ஆனால், போர் விமானங்களை அனுப்பித் தான் இலங்கையை வேவு பார்க்க வேண்டும் என்ற அவசியம் அமெரிக்காவுக்குக் கிடையாது.
அமெரிக்காவின் விரல் நுனியில் இலங்கை பற்றிய எல்லாத் தரவுகளும் உள்ளன. அமெரிக்கா தனது செய்மதிகளைக் கொண்டே எல்லாவிதமான வேவுகளையும் செய்ய முடியும். போரின் இறுதிக்கட்டத்தை அமெரிக்க செய்மதிகள் படமாக்கி வைத்திருக்கின்றன. அந்தளவுக்கு அதனிடம் தொழில்நுட்பங்கள் உள்ளன.
அதைவிட, இலங்கையை வேவு பார்ப்பதற்கு இங்கு என்னதான் இருக்கிறது? அப்படி வேவு பார்ப்பதென்றால் கூட அந்தப் போர் விமானங்கள் கடலுக்கு மேலாகப் பறந்து விட்டுப் போனால் போதாது. தரைக்கு மேலாக வந்திருக்க வேண்டும்.
அதேவேளை, அமெரிக்காவும், எல்லாவற்றையும் நேரடியாகவோ அல்லது வெளிப்படையாகவோ செய்வதில்லை. சில விடயங்களை மறைமுகமாகவும், நாசூக்காகவும் வெளிப்படுத்துவதும் உண்டு. அத்தகையதொரு மிரட்டலாக இது இருக்கலாமோ...? என்ற அச்சத்தை சிங்களத் தேசியவாதிகள் மத்தியில் இந்த விவகாரம் எழுப்பியுள்ளது.
சீனாவின் பக்கம் இலங்கை அதிகம் சாயத் தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்க விரோத உணர்வுகளைத் தூண்டிவிட இந்தச் சம்பவம் காரணமாகியுள்ளது.
-சுபத்ரா
No comments:
Post a Comment