ஒரு வருட சிறைவாசத்தைக் கடந்து ஒருவழியாக வெளியே வந்துவிட்டார் ஆ.ராசா. ஸ்டாலினின் டெல்லி விசிட், அழகிரியின் டெலிபோன் பேச்சு, கனிமொழியின் ஆறுதல், தயாநிதி மாறனின் கைகுலுக்கல் என ராசாவின் சிறைக்காயங்களுக்கு களிம்பு பூசும் நிகழ்வுகள் நல்லபடி நடந்து முடிந்திருக்கின்றன. சென்னையில் கால் வைத்த ராசாவுக்கு போதிய மட்டுமான வரவேற்பையும் தி.மு.க. தரப்பு வழங்கி கவுரவித்திருக்கிறது. (கனிமொழி அளவுக்கு இல்லை என்றாலும், ஓரளவுக்குத் தேவலாம்!)
''ராசாவால்தான் தேர்தல் தோல்வியே நிகழ்ந்தது... அவரை கட்சியை விட்டு நீக்குங்கள்!" என்றெல்லாம் குரல் எழுப்பிய ஸ்டாலின், தன் மனைவியோடு டெல்லிக்குப் போய் ராசாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது ஏன்? ராசாவை திரும்பிக்கூடப் பார்க்காத மு.க.அழகிரி ராசா சிறையில் இருந்து வெளியே வருவதற்கு சில நாட்களுக்கு முன் திகாருக்குப் போய் சந்தித்ததும், ராசா வெளியே வரும் நாளில் மாலை நான்கரை மணிக்கே திகாருக்கு வந்து காத்துக் கிடந்ததும் ஏன்? ராசாவால்தான் எனக்கு இத்தனை சிக்கலும் என சலித்துக்கொண்ட கனிமொழி திகாரிலிருந்து வெளியே வரும் ராசா என்னுடைய காரில்தான் ஏற வேண்டும் என அடம்பிடித்தது ஏன்? கருணாநிதி வாரிசுகளின் இந்தக் கரிசனத்துக்கு என்ன காரணம்?
பணத்தைத் தவிர வேறொன்றும் இல்லை. ராசாவை எந்தக் கணத்திலும் கைவிட்டுவிடக் கூடாது என உறுதியோடு இருக்கிறார் கருணாநிதி. அப்படியிருக்க, ராசாவை தங்கள் பக்கம் இழுத்துக்கொள்ள கருணாநிதியின் வாரிசுகளுக்கு மத்தியில் இப்போது போட்டி நடக்கிறது என்பதுதான் உண்மை. ராசாத்தியம்மாள் உறவுகள் வட்டாரத்தில் 'ராசா எப்பவும் எங்க பக்கம்தான் இருப்பார்' என வெளிப்படையாகப் பேசுவதும், 'ராசா என்னைக் கேட்காமல் எதுவும் செய்வதில்லை' என மதுரைக்காரர் முழங்குவதும் ஆச்சரிய அலைகள்!
சென்னை வந்த ராசா இன்னும் தீராத கோபத்திலிருப்பது மாறன் சகோதரர்கள் மீதுதான். சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது ராசா சொன்ன வார்த்தைகளே இந்த கோபத்தை வெளிக்காட்டின. ''நீரா ராடியா போன்றவர்கள் தப்பித்துவிட்ட நிலையில், நீங்கள் மட்டும் மாட்டிக் கொண்டீர்களே...'' என ராசாவிடம் கேள்வி கேட்டார்கள். ''இன்னும் யார் யார் பாக்கி இருக்கிறார்கள் என்பதை நீங்களே சி.பி.ஐ.இடம் சொல்லுங்களேன்... அப்படிச் சொன்னால் அவர்களும் கைதாக வாய்ப்பிருக்கிறதே..." என்றார் ராசா. இந்த வார்த்தைகளின் பின்னணி தீவிரமான அலசலுக்கு உட்பட்டது. இந்த வார்த்தைகளைச் சொன்னபோது ராசாவின் முகத்தில் தெரிந்த மெல்லிய புன்னகை கவனிக்கத்தக்கது. (அந்த சந்திப்பில் நாமும் உடனிருந்ததால் இவ்வளவு உறுதியாகச் சொல்ல முடிகிறது)
கருணாநிதியின் வாரிசுகள் வரிசையாக வலை வீசியபடி இருந்தாலும், தான் இந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆ.ராசா நன்கு அறிந்தவராகவே இருக்கிறார். நீலகிரிக்குப்போய் தொகுதி மக்களை சந்திக்க இருக்கும் ராசா அடுத்தபடி என்ன அரசியல் மூவ்களை செய்யப்போகிறார் என்பதை தி.மு.க. தொண்டர்கள் ஆர்வத்தோடு பார்க்கிறார்கள்.
அறிவாலய வாசலில் ராசாவுக்கு மிக நெருக்கமான ஒருவர், ''சும்மா சொல்லக்கூடாது... சரியான வரவேற்பைக் கொடுத்து தலைவர் உங்களை ரொம்ப கவுரவப்படுத்திட்டார்..." எனக் கிசுகிசுக்க, ராசா பதிலுக்கு சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா...
''இவங்க அத்தனை பேரும் நான் ஏற்பாடு செஞ்ச ஆளுங்க... பெரம்பலூர்ல இருந்து ஆயிரம் பேர்... நீலகிரியில இருந்து ஆயிரம் பேர்னு முதல் நாளே நான் ஏற்பாடு பண்ணிட்டேன். நம்மளை நாமளேதான் வரவேத்துக்கணும் என்பது எனக்குத் தெரியும்!"
திகார் சிறைவாசம் ராசாவை எவ்வளவு பக்குவப்பட்டவராக மாற்றியிருக்கிறது என்பதற்கு இந்த வார்த்தைகளே உதாரணம்!
- கும்பல்
No comments:
Post a Comment